Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





விழியே பேசு...

விழியே பேசு...


அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணிதத்தின் பின்னணி

Posted: 18 Apr 2012 11:04 PM PDT

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கடந்த 15-ந்தேதி காலை தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தினார். அன்று மாலை மின் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. பொதுக்கூட்டத்திலும் பேசினார். 

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராம் தவிர மற்ற நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சிகளை மத்திய மந்திரியும், தென்மண்டல தி.மு.க. அமைப்புச்செயலாளருமான மு.க.அழகிரியின் ஆலோசனையின்படி தி.மு.க. நிர்வாகிகள் புறக்கணிப்பு செய்ததாக தகவல் வெளியானது. 

இதனிடையே கட்சி நிர்வாகிகள் தி.மு.க. இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற பல இளைஞர்களை போகவிடாமல் தடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் தி.மு.கவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத மதுரை நகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.கே.குருசாமி, தர்மலிங்கம், மன்னன், ஜெயராஜ் மாவட்ட துணைச்செயலாளர்கள் சிவக்குமார், உதயகுமார், சின்னம்மாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், பொன்சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், பாண்டிய ராஜன், முபாரக் மந்திரி, முருகன், ராமலிங்கம் ஆகிய 17 பேர்களுக்கு கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. 

அந்த நோட்டீசில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது ஏன்? இளைஞர் அணி நேர்காணலுக்கு சென்ற இளைஞர்கள் பலரை தடுத்தீர்களா? இது தொடர்பாக 7 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக பதில் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த நோட்டீசை பெற்ற தி.மு.க. நிர்வாகிகள் 17 பேரும் தி.மு.க. தலைமைக்கு விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளனர். மத்திய மந்திரி மு.க.அழகிரி நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை வருகிறார். அப்போது அவரிடம் இதுதொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். 

மு.க.அழகிரியின் ஆலோசனையை பெற்று நோட்டீசிற்கு பதில் அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்தும் முடிவு செய்கிறார்கள். இதுதொடர்பாக தி.மு.க. பகுதி செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது:- 

பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் மதுரையில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 10-ந்தேதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மத்திய மந்திரி மு.க.அழகிரி வெளிநாட்டில் இருக்கும் நேரத்தில் இளைஞர் அணி நேர்காணல் நிகழச்சியை மதுரையில் நடத்த வேண்டுமா? என்று கேட்டோம்.

கட்சி மேலிடம் தேதியை அறிவித்து விட்டது என்று மாவட்ட செயலாளர் தளபதி கூறினார். அப்படி என்றால் முறைப்படி மத்திய மந்திரி மு.க.அழகிரியின் பெயரை அழைப்பிதழில் போட வேண்டும் என கேட்டோம். ஆனால் இரு நிகழச்சிகளிலும் மு.க.அழகிரியின் பெயர் போடப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 

தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்து வரும் மு.க.அழகிரியின் பெயரை போடாததால் இரு நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் மட்டும் அல்ல மதுரை மாநகரில் உள்ள 72 வட்டக்கழக செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள், இன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் யாருமே அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. 

தி.மு.க. ஒரு ஜனநாயக கட்சி. எந்த கட்சியிலும் உள்கட்சி பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம். இதனை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசிற்கு அண்ணன் மு.க.அழகிரியின் ஆலோசனைகளை பெற்று பதில் அளிக்க தயாராக இருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

அவைத்தலைவர் இசக்கி முத்து உள்பட நிர்வாகிகள் அனைவரும் இதே கருத்தை தெரிவித்ததுடன், கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீசை சந்திக்க தயாராக இருப்பதாக கூறினர். இந்த விவகாரம் மதுரை மாநகர் தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







செல்வராகவனின் இரண்டாம் உலகம் - முதல் பார்வை

Posted: 18 Apr 2012 10:53 PM PDT


மயக்கம் என்ன படத்துக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன் உருவாக்கி வரும் இரண்டாம் உலகம் படத்தின் முதல் பார்வைக்கான படங்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் - யுவன் - அரவிந்த் கிருஷ்ணா கூட்டணியாக இருந்தபோது உருவான ஐடியா இந்தப் படம். இவர்களின் 'ஒயிட் எலிபென்ட்' நிறுவனம் உடைந்து சிதறியதில், இந்தப் படம் உருவாவதும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள்.

இந்தப் படத்தின் ஹீரோக்கள் தனுஷ், ராணா, அல்லு அர்ஜூன் என மாறிக்கொண்டே இருந்தார்கள். கடைசியில் ஆர்யா -அனுஷ்கா என்பது உறுதியானது.

ஆரம்பத்தில் யுவன், பின்னர் ஜீவி பிரகாஷ், மீண்டும் யுவன், இப்போது ஹாரிஸ் ஜெயராஜ்... இசையமைப்பாளர்கள் மாறிய 'ஆர்டர்' இது.

ஒளிப்பதிவு ராம்ஜி. ஷுட்டிங் தொடங்குவதும் நிற்பதுமாக இதோ அதோ என இழுத்தடித்த ஒரு படம்.. இப்போது படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள்.

ஸ்டில்களைப் பார்த்தால், ஒரு இனிமையான உணர்வு வருகிறது. படம் பார்க்கும்போது அந்த உணர்வு இருந்தால் நன்றாக இருக்கும்!



கோலிவுட்டை முந்திய டோலிவுட்...

Posted: 18 Apr 2012 10:40 PM PDT


இந்தியாவில் அதிக அளவிலான சினிமாக்களை தயாரிப்பதில், டோலிவுட் (தெலுங்கு) இரண்டாமிடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாலிவுட்டும் (இந்தி), மூன்றாமிடத்தில் கோலிவுட்டும் (தமிழ்) உள்ளன. இந்திய சினிமா தொழிலை பொறுத்தவரையில், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2008ம் ஆண்டில், 1,325 சினிமாக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதுவே, 2009ல், 1,288ஆக குறைந்தது. 2010ல், 1, 274 சினிமாக்களாக இருந்தது, கடந்த 2011ல், 1, 255ஆக குறைந்தது.

அதுபோல், கடந்த 2011ல், இந்தி, தமிழ், மலையாளம், மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கில மொழி படங்களின் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறைந்தன. அதே நேரத்தில், வங்க மொழி சினிமாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரியா, தெலுங்கு சினிமாக்களும் அதிகமாக வெளிவந்து வசூலில் சாதனை படைத்தன. வங்க மொழியைப் பொறுத்தவரை, 122 சினிமாக்களும், ஒரிய படங்களைப் பொறுத்தவரை 30 படங்களும், அந்த ஆண்டில் வெளிவந்தன.

முன்னேறும் தெலுங்கு: கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 215 இந்தி சினிமாக்களும், 202 தமிழ் சினிமாக்களும் தயாரிக்கப்பட்டன. தெலுங்கு சினிமாக்களை பொறுத்தவரை, 181 சினிமாக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆனால், கடந்த 2011ம் ஆண்டில், தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக, 192 சினிமாக்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதுபோல், 206 சினிமாக்களை தயாரித்த வகையில், இந்தி சினிமா உலகம் முதலிடத்திலும், 185 சினிமாக்களை தயாரித்த தமிழ் சினிமா மூன்றாமிடத்திலும் உள்ளன. தேசிய திரைப்பட வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.



சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்

Posted: 18 Apr 2012 08:30 PM PDT


முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை  சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதற்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார்.



இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆஜரானார்கள் சசிகலா, ஜெயலலிதா சார்பில்  புதிய மனு ஒன்று இன்று தாக்கல் செய் யப்பட்டது.

அந்த மனுவில் ஆவணங்கள் படித்து பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா இதன் மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையும் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



உலக அரங்கில் அதிகாரமிக்க தலைவர்கள் வரிசையில் மம்தா பானர்ஜி

Posted: 18 Apr 2012 08:20 PM PDT


உலக அரங்கில் 2012-ம் ஆண்டில் அதிகாரமிக்க 100 தலைவர்களின் பெயர்களை 'டைம் இதழ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் தொழிலதிபர் வாரன் பப்பெட் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளன.

இந்தப்பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி தவிர அட்வோகேட் அஞ்சலி கோபாலன் பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு நூலகம், மற்றும் அரசு உதவி பெரும் நூலகங்களில் குறிப்பிட்ட நாளிதழ்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவது மற்றும் முதல்வர் குறித்தான கார்ட்டூன் வெளியிட்ட பேராசிரியர் கைது போன்ற செயல்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் நிலையில் இச்செய்தி வந்துள்ளது குறிபிடத்தக்கது.

மேலும் டைம் இதழ் மம்தா பல ஆண்டுகளாக போராடி தன்னை வலிமைமிக்க அரசியல்வாதியாக உலகிற்கு காட்டியுள்ளார் எனவும் புகழாரம்  சூட்டியுள்ளது.

கடந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்யுடன் ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பெரும் சவாலாகவும் உள்ளார்.



முற்றுகிறது திமுக உள்கட்சி மோதல்: அழகிரி ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்?

Posted: 18 Apr 2012 08:00 PM PDT


மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காத மதுரை தி.மு.க. நிர்வாகிகளுக்கு தலைமைக்கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளது.7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 15-ந் தேதி மதுரையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் தி.மு.க. தலைமைக்கழகத்தில் இருந்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சிலருக்கு நேற்று நோட்டீசு ஒன்று வந்தது. அந்த நோட்டீசு தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கையப்பமிட்டு வந்து உள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:-
 
தமிழகம் முழுவதும் கழகத்தின் அறிவிப்பின்படி இளைஞரணி நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் மதுரை மாநகரிலும் இந்த நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டு, கழகப்பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நேர்காணல் கடந்த 15-ந் தேதி மதுரை பி.டி.ஆர்.மகாலில் நடந்தது.
 
அதே தினத்தில் கழகத்தின் அறிவிப்பின்படி, மாலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி, நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த சில இளைஞர்களை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கே விடாமல் தடுத்து இருக்கிறீர்கள்.
 
இது கழக கட்டுப்பாடுகளை மீறிய செயலாகும். ஒழுங்கு நடவடிக்கைக்கு உரியதாக தலைமைக்கழகம் கருதுகிறது. எனவே இந்த நோட்டீசு கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். தவறினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
 
இந்த நோட்டீசு, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத்தலைவர் இசக்கிமுத்து, பொருளாளர் மிசா பாண்டியன், கூடுதல் துணைச்செயலாளர் சிவக்குமார், தி.மு.க. பகுதி கழக செயலாளர்கள் பொன். சேது, ஒச்சுபாலு, கோபிநாதன், ரவீந்திரன், பாண்டியராஜன், முருகன், முபாரக்மந்திரி, ராமலிங்கம் ஆகியோருக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.



மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதால் ரசிகர்களிடம் சிக்கிய டோனி

Posted: 18 Apr 2012 07:52 PM PDT


5-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 நகரங்களில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புனேவாரியர்ஸ் அணிகள் இன்று (வியாழக்கிழமை) மோதுகின்றன.
இந்த ஆட்டம் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதையட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை ஆந்திர மாநிலத்தில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து இருந்தார்.
இதையடுத்து, டோனியின் மோட்டார் சைக்கிள் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் இறக்கப்பட்டது.ரசிகர்களிடம் சிக்கினார் இந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல டோனி, போலீஸ் பாதுகாப்புடன் பாடியநல்லூருக்கு வந்தார்.
பின்னர், மோட்டார் சைக்கிளை தானே ஓட்டிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் போலீஸ் பாதுகாப்பு கார் வந்து கொண்டு இருந்தது. பாடியநல்லுர் மேம்பாலத்தில் டோனி வந்தபோது அவருடைய மோட்டார் சைக்கிளின் முன் டயர் திடீரென பஞ்சர் ஆனது.
இதனால் வண்டியை நிறுத்திய டோனி ஹெல்மெட்டை கழற்றி சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். சாலையோரம் நின்று கொண்டு இருந்த டோனியை பார்த்த அவருடை ரசிகர்கள் டோனியை சூழ்ந்துகொண்டனர்.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு டோனி காரில் ஏறிச்சென்றார். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டோனியின் மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு புது டியூப் மாற்றி செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.   



நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு

Posted: 18 Apr 2012 10:34 AM PDT


நடிகை மீனாவுக்கு கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நைனிகா என்று பெயர் சூட்டினார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க மீனாவை அணுகினர். அவர் மறுத்து விட்டார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் அக்கா வேடத்தில் நடிக்க மீனாவுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திசேகரன் இயக்கி இருந்தார். அது தற்போது ரீமேக் செய்யப்படுகிறது. விஜயின் அப்பாவான எஸ்.ஏ. சந்திசேகரன் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் கதாநாயகனின் அக்கா வேடத்துக்கு பலரை பரிசீலித்தனர். இறுதியில் மீனா பொருத்தமாக இருப்பார் என்று அழைத்துள்ளனர். இதில் மீனா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




கெடு முடிந்த நிலையில் மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்க ஒடிசா அரசு சம்மதம்

Posted: 18 Apr 2012 10:24 AM PDT


ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் முதலில் நிபந்தனை விதித்தனர். பின்னர் அவர்களில் 13 பேர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
 
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவோயிஸ்டுகள் விதித்திருந்த கெடு இன்று மாலை 5 மணியுடன் முடிந்தது. தங்களுக்கு கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை நிறைவேற்ற ஒடிசா அரசு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் இன்று மாலை கெடு முடிவடைந்த நேரத்தில், மாவோயிஸ்டுகள் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிய தகவலில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் விதி நாளை மக்கள் நீதிமன்றத்தில் நிர்ணயிக்கப்படும் என  தெரிவித்திருந்தனர்.
 
கடத்தப்பட்ட எம்.எல்.ஏ எப்போது மீட்கப்படுவார் என்ற கேள்வியும், மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்று 55 போலீசாரை கொன்ற தீவிரவாதியை ஒடிசா அரசு விடுவித்து விடுமோ என்ற எண்ணமும் ஒடிசாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.



ராமஜெயம், நகைக்கடை அதிபரைக் கொன்றது நெல்லை கூலிப்படையா?

Posted: 18 Apr 2012 10:16 AM PDT


ராமஜெயம் கொலை வழக்கு மற்றும் சென்னையைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் கணேஷ்ராம் கொலை வழக்கு ஆகியவற்றில் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திருச்சி மற்றும் சென்னை போலீசார் நெல்லையில் முகாமிட்டுள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தை நெல்லையைச் சேர்ந்த கூலிப்படையினர் கொலை செய்திருக்கலாம் என்று திருச்சி போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் நெல்லையில் செயல்பட்டு வரும் சில கூலிப்படையினர் தலைமறைவாகியுள்ளனர். இதனால் போலீசாரின் சந்தகேம் வலுத்துள்ளது. இதையடுத்து திருச்சி போலீசார் நெல்லையில் முகாமிட்டு கூலிப்படையினரை ரகசியமாகக் கண்காணி்தது வருகின்றார்கள்.

இதற்கிடையே கடந்த 14ம் தேதி சென்னை மதுரவாயிலில் நகைக்கடை அதிபர் கணேஷ் ராம் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டார். அவரது கடையில் இருந்த 80 பவுன் தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த கொலை, கொள்ளையில் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையிலான தனிப்படை சென்னையில் இருந்து நெல்லை சென்றுள்ளது. கொலையாளிகளின் படங்கள் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.



புது வீடு கட்ட ரூ.85 லட்சம் கோரிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்!

Posted: 18 Apr 2012 08:59 AM PDT

புதுவீடு கட்டுவதற்காக ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மத்திய அரசிடம் ரூ.85  லட்சம் கேட்டதாக அவர் மீது மேலும் ஒரு புகார் கிளம்பியுள்ளது. 

ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் 5 ஆண்டு பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் 25-ம்  தேதியுடன் முடிவடைகிறது.
 
ஓய்வு பெற்ற பிறகு பிரதிபா பாட்டீல், புனேவில் புதிய பங்களாவில் குடியேற முடிவு  செய்துள்ளார்.இதற்காக அவருக்கென பிரத்யேகமாக புதிய வீடு கட்டப்படுகிறது.இதற்காக   ராணுவ நிலத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. 

அவருக்கு விதிமுறைகளின்படி ஒதுக்கப்படவேண்டிய நிலத்தை விட, ஆறு மடங்கு  அதிகமாக ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின்  கீழ் தெரிய வந்துது. 

இந்நிலையில் புதிய பங்களா கட்ட தனக்கு ரூ.85 லட்சம் அரசு பணத்தை தர வேண்டும்  என்று பிரதிபா பாட்டீல் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதிய தகவலும் தற்போது தெரிய  வந்துள்ளது. 
 
ஆனால் பிரதிபாவின் இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சகம் அதை ஏற்கவில்லை.  ஓய்வு பெறும் ஜனாதிபதிக்கு வீடு கட்ட ரூ.20 லட்சம் மட்டுமே தர முடியும் என்று  கூறிவிட்டது. 

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒருவருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய  அரசு பணம் கொடுப்பது இதுவே முதல் முறையாகும்.

பிரதிபா பாட்டீல் சர்க்கரை ஆலை உள்பட பல தொழிற்சாலைகள் வைத்துள்ளார்.  பணக்காரரான அவர் வீடு கட்ட மத்திய அரசிடம் பணம் கேட்டது பலருக்கும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜனாதிபதி பதவி வகித்தவர்களில் அரசு பணத்தை அதிக அளவில் செலவழித்தது  இவர்தான் என்று ஏற்கனவே பல தடவை சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.





சென்னையில் கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Posted: 18 Apr 2012 08:24 AM PDT


சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
 
சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.):- சென்னையில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது?
 
மேயர் சைதை துரைசாமி:- பன்றிக்காய்ச்சல் பரவும் முறை, இதற்கான அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 120 பள்ளி, 8 கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. தற்போது 28 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியது கண்பிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் மஞ்சள், மிளகு, சோற்று கற்றாலை, பூண்டு, சிறிய வெங்காயம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது.
 
ஜானகிராமன் (அ.தி. மு.க.)- துரைப்பாக்கம் பகுதியில் குப்பைகளை லாரியில் மூடாமல் எடுத்து செல்வதால் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகிறது.
 
மேயர்:- அவ்வாறு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
சுகுமார்பாபு (அ.தி.மு,க.)- 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.
 
மேயர்:- இது முதல்வரின் கவனத்தில் உள்ளது. பரிசீலித்து முடிவு எடுப்பார்.
 
தமிழ்ச்செல்வன் (காங்):- மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியுடன் இந்தியும் கற்று தர வேண்டும்.
 
மேயர்:- அரசின் கொள்கை முடிவுகள் பற்றி இங்கு பேச வேண்டாம்.
 
இதையடுத்து நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
 
சென்னை பள்ளிகளில் ஏற்கனவே 69 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உயர்கல்விக்கு வசதியாக இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி இந்த ஆண்டு கூடுதலாக 30 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும். சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தொழில்வரி சீராய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி தொழில் வரி அரையாண்டுக்கு ரூ.100 முதல் ரூ.1,095 வரை வசூலிக்கப்படும். சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் நகை கடை மற்றும் பெட்ரோல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிரா பொருத்தினால்தான் லைசென்சு புதுப்பிக்கப்படும். சரியாக பராமரிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
விவாதத்தின்போது கடந்த மாநகராட்சி நிர்வாகத்தில் மாநகராட்சி பள்ளிகளில் சென்னை பள்ளிகள் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசு பெயர் மாற்றம் செய்ததாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். இதற்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கண்ணிய குறைவாக பேசியதாக கூறி தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். அவர்களை மேயர் சமாதானப்படுத்தி அறிவுரை வழங்கினார்.
 
அப்போது அவர் கூறும்போது, ''மன்ற விதி எல்லோருக்கும் பொதுவானது. தி.மு.க.வினர் திட்டமிட்டு காரணங்களை தேடிப்பிடித்து வெளிநடப்பு செய்கிறார்கள். நீங்களும் அவர்களை போல் நடந்துக் கொள்ளக்கூடாது. தி.மு..கவினர் கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் என்னால் பதில் சொல்ல முடியும். ஆனால் மன்றம் அமைதியாக நடக்கக் கூடாது என்று தி.மு.க. வினர் திட்டமிட்டு ஏதாவது செய்கிறார்கள். எனவே நீங்கள் கூட்டத்தில் அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் எழுந்து நின்று பேசுவது இதுவே கடைசியாக இருக் கட்டும்'' என்றார்.




எங்கப்பா மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை என் படம் மீது காட்டுகிறது ஜெ அரசு!- உதயநிதி

Posted: 18 Apr 2012 08:17 AM PDT


என் தந்தை மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியை எனது படங்கள் மீது காட்டுகிறது ஜெயலலிதா அரசு, என தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:

"நான் தயாரித்து நடித்து திரைக்கு வந்துள்ள 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 7-ம் அறிவு படத்துக்கு, அந்தப் படம் திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு வரிவிலக்கு அறிவித்து, அந்தப் பலன் யாருக்கும் கிடைக்காமல் செய்தனர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் பொறுத்தவரை, அரசு நிர்ணயித்துள்ள அத்தனை விதிமுறைகளையும் பூர்த்தி செய்து உரிய முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளோம்.

சமீபத்தில் கேளிக்கை வரிவிலக்கு கொடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் உள்ளது. பாரில் வைத்து திருமணம் நடப்பது போல் காட்சி வருகிறது. இதுபோன்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்துவிட்டு, எந்த வித ஆபாச காட்சிகளும், கலாச்சார சீரழிவு விஷயங்களும் இல்லாத, எங்கள் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?

வன்முறை அதிகமாக உள்ள மற்றும் ஆங்கில கலப்பு அதிகமாக உள்ள படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களையும் கவர்ந்த, ஆங்கிலக் கலப்பில்லாத 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துக்கு வரிவிலக்கு அளிக்க மறுப்பது என்ன நியாயம்?

இதனால் எனக்கு மட்டும் பாதிப்பு இல்லை. என்னை நம்பி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் கதி என்ன?: கெடு முடிந்தது

Posted: 18 Apr 2012 08:14 AM PDT


ஒடிசா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். எம்.எல்.ஏ.வை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் 29 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர். 

மாவோயிஸ்டுகளில் 4 பேரை தவிர 25 பேரை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால் தாங்கள் கூறிய 29 பேரையும் இன்று மாலை 5 மணிக்குள் விடுவிக்க வேண்டுமென ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் கெடு விதித்திருந்தனர். தற்போது அவர்கள் விதித்த கெடு முடிவடைந்து விட்டது. 

இந்நிலையில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால், எம்.எல்.ஏ விவகாரத்தில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். இதனால் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா விவகாரம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






ஜெ ஆதரவு யாருக்கு... விஜய் அப்பாவுக்கா ? விஜயகாந்த் நண்பருக்கா?

Posted: 18 Apr 2012 08:09 AM PDT


குழம்பம், மோதல், பரபரப்பின் உச்சத்திலிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

பெப்சி Vs தயாரிப்பாளர்கள் என்று ஆரம்பித்த பிரச்சினை, இப்போது தயாரிப்பாளர்கள் Vs தயாரிப்பாளர்கள் என்று முட்டிக் கொண்டு நிற்கிறது. ஒருவேளை பெப்சியுடன் பேசுவைத் தவிர்க்க பேசி வைத்துக் கொண்டு மோதுகிறார்களோ என கமெண்ட் அடிக்கும் அளவுக்கு அரசியல் வாடை!

சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் குறித்து பேசுவதில் பெப்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட மோதல், புதிய தொழிலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்கும் அளவுக்குப் போனது. இதில் பெப்சியின் பக்கம் நின்ற அமீரைத்தான் முதலில் குறி வைத்தது தயாரிப்பாளர் சங்கம். அமீரும் பெப்சியும் அம்மாவிடம் முழுமையாக சரணடைந்து, நடந்த அனைத்தையும் கூறி காப்பாற்றுமாறு உருக, இந்தப் பிரச்சினையை கையாள தொழிலாளர் நலத்துறை மற்றும் அதன் அமைச்சருக்கு உத்தரவிட்டுவிட்டார்.

தொழிலாளர்களுக்கு விரோதமான தீர்வை ஆதரிக்க முடியாது என்று ஆரம்பத்திலேயே தமிழக அரசு உறுதியாக இருந்ததால், பெப்சியுடன் பேச தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. தமிழக அரசையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை.

அதுவரை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு இருந்த இமேஜ், அதிமுக அபிமானி, முதல்வருக்கு வேண்டப்பட்டவர் என்பது.

ஆனால் இவர் சங்கத் தலைவரானதிலிருந்து ஜெயலலிதாவைப் பார்க்க ஒருமுறை கூட அனுமதி கிடைக்கவில்லை. அட, ரூ 25 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதிக்குக் கொடுக்க நேரம் கேட்டு தவம் கிடந்து பார்த்தார்கள். ஜெயலலிதா கண்டு கொள்ளவே இல்லை. பெப்சி பிரச்சினை குறித்து பேச ஜெயலலிதாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டனர் தயாரிப்பாளர்கள். ம்ஹூம்... அந்த நேரத்தில் ரஜினி, கமல், சூர்யா குடும்பம் என்று வரவழைத்துப் பார்த்துப் பேசினார்.

இதையெல்லாம் கவனித்து வந்த எதிர்த் தரப்புக்கு, எஸ் ஏ சந்திரசேகரன், அம்மா ஆட்சிக்கு வேண்டப்பட்டவர் அல்ல என்பது புரிந்துவிட்டது.

அப்போதுதான் அதிமுகவில் சேர்ந்தார் விஜயகாந்தின் முன்னாள் நண்பர் இப்ராகிம் ராவுத்தர். நேரடி கட்சிக்காரர் என்பதால் ராவுத்தருக்குதான் இப்போது முதல்வரின் ஆதரவு என்பதால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ராவுத்தர் அணிக்குப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

ராவுத்தர் அணி சட்டவிரோதம் என்று எஸ்ஏ சந்திரசேகரன் கூறினாலும், அவர் பின்னால் எவ்வளவு தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் மனநிலை புரிந்து நடந்து கொண்டால்தான் சினிமா தொழில் சிக்கலின்றிப் போகும் என்பதால், மற்ற தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

இப்போது எஸ்ஏ சந்திரசேகரன் பொதுக்குழு கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில், எத்தனை தயாரிப்பாளர்கள் வருவார்கள், போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன



பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவோம்- எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை

Posted: 18 Apr 2012 07:56 AM PDT


பெட்ரோல் மீதான கலால் வரியை (excise duty) மத்திய அரசு குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்துவோம் என்று மத்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்.எஸ்.புடோலா கூறுகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ. 14.78 கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை நாங்கள் மத்திய அரசுக்கு செலுத்துகிறோம். இப்போது ஒரு லிட்டரை பெட்ரோல் விற்பதால் எங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்துவிட்டாலும், டிசம்பர் மாதத்துக்குப் பின் பெட்ரோல் விலையை நாங்கள் உயர்த்தவில்லை (5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை மனதில் வைத்தும், திரிணமூல் காங்கிரஸ்-திமுக மிரட்டலாலும் மத்திய அரசு விலையை உயர்த்த விடவில்லை). இதனால் ஒரு நாளைக்கு பெட்ரோல் விற்பனையால் மட்டும் எங்கள் நிறுவனத்துக்கு ரூ. 49 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

எங்களுக்கு ஏற்படும் இந்த இழப்பை மத்திய அரசு தர வேண்டும் அல்லது விலையை லிட்டருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை உயர்த்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

இனியும் எங்களால் கடன் வாங்கி பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றார்.

பெட்ரோல் விலையை உயர்த்த அனுமதிக்கிறார்களோ இல்லையோ, அதன் மீதான கலால் வரியை குறைக்கச் செய்யவே இந்தக் கருத்தை புடோலா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோல் தவிர டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸை குறைந்த விலைக்கு விற்பதால் மத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ. 573 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



ஐ.பி.எல். கிரிக்கெட்: முத்திரை பதிக்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

Posted: 18 Apr 2012 07:44 AM PDT


இந்த ஐ.பி.எல். போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-

கிறிஸ்கெய்ல்: (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்) கடந்த ஐ.பி.எல். போட்டியை போலவே இந்த ஐ.பி.எல். ஆட்டத்தில் அவர் அதிரடியாக ஆடுகிறார். புனே அணிக்கு எதிராக நேற்று 81 ரன்னும் (48 பந்து), சென்னைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 68 ரன்னும் (35 பந்து) எடுத்தார். ஜமைக்காவை சேர்ந்த 32 வயதான அவர் 4 ஆட்டத்தில் விளையாடி 159 ரன் எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரிகளும், 15 சிக்சர்களும் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் 159 ஆகும். கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு கெய்ல் ஒப்பந்தம் ஆனார். அவரை அந்த அணி தொடர்ந்து தக்க வைத்தது. கொடுக்கப்பட்ட விலையை விட அவர் சிறப்பாக ஆடுகிறார். அவரது விலை ரூ.3.25 கோடியாகும்.

போலார்ட் (மும்பை இந்தியன்ஸ்) கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்த வீரர்களில் இவரும் ஒருவர். சிறந்த ஆல் ரவுண்டர். 4 ஆட்டத்தில் விளையாடி 97 ரன் எடுத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கிலும் (64 ரன்) பந்து வீச்சிலும் (4 விக்கெட்) முத்திரை பதித்தார். அவர் மொத்தம் 9 விக்கெட் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளார். அவரது விலை 4 1/2 கோடியாகும்.

பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்) டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி மூலம் வெற்றியை பெற்று கொடுத்தார். 18 பந்தில் 43 ரன் (5 சிக்சர்) அடித்தார். 5 ஆட்டத்தில் 114 ரன் எடுத்துள்ளார். டிரினிடாட்டை சேர்ந்த அவரது விலை ரூ.1 கோடியாகும்.

கெவின் கூப்பர் (ராஸ்தான் ராயல்ஸ்) முதல் முறையாக ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார். ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் பெற்ற 2 வெற்றிக்கு இவரது பந்து வீச்சு காரணமாக இருந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அதிரடியாகவும் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஆவர். அவரது விலை ரூ.25 லட்சம் ஆகும்.

சாமுவேல்ஸ் (புனே வாரியர்ஸ்) இந்த ஐ.பி.எல். போட்டியில்தான் அறிமுகம் ஆனார். சிறந்த ஆல்ரவுண்டர். 5 ஆட்டத்தில் 94 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 104.44 ஆகும். 3 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இவரது விலை ரூ.50 லட்சம் ஆகும்.

சுனில் நரைன் (கொல்கத்தா) முதல் முறையாக விளையாடும் இவரது விலை ரூ.3 1/2 கோடியாகும். கொடுத்த விலைக்கு ஏற்ற வகையில் அவர் பந்து வீச்சில் முத்திரை பதித்து வருகிறார். 3 ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிராக 19 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். துரதிரிஷ்டவசமாக அந்த ஆட்டத்தில் கொல்கத்தா 2 ரன்னில் தோற்றது.



தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்': ராசா

Posted: 18 Apr 2012 05:44 AM PDT


தொலைத் தொடர்பு சேவையில் புதிய நிறுவனங்கள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் (telecom cartel's conspiracy) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று முன்னாள் அமைச்சர் ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார் கடந்த சில நாட்களாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் டி.எஸ்.மாத்தூரிடம் (இந்த வழக்கில் முக்கிய சாட்சியான இவர் ராசாவுக்கு எதிராக வாக்குமூலம் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராசா கைது செய்யப்பட்டதற்கு 2011ம் ஆண்டில் சிபிஐயிடம் இவர் தந்த வாக்குமூலமும் முக்கிய காரணம்) குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

இன்றும் தனது குறுக்கு விசாரணையைத் தொடர்ந்த சுஷில் குமார், ராசாவின் சார்பில் டி.எஸ்.மாத்தூரிடம் சில அதிரடி கேள்விகளை எழுப்பினார்.

ராசாவின் மீதான இந்த 2ஜி வழக்கே சில தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டு சதி தான் என்ற சுஷில் குமார், டி.எஸ்.மாத்தூரைப் பார்த்து, நீங்கள் Cellular Operators Association of India (COAI) அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். (இந்த அமைப்பில் ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உள்ளிட்ட ஜிஎஸ்எம் செல்போன் நிறுவனங்கள் உள்ளன). நீங்கள் பதவியில் இருந்தபோது இந்த அமைப்பைச் சேர்ந்த செல்போன் நிறுவனங்களுக்கு 2ஜி லைசென்ஸ் தந்தபோது அதை நீங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்கும் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டபோது மட்டும், அதற்கு எதிராக குறிப்புகளை எழுதினீர்கள் என்றார்.

ஆனால் இதை டி.எஸ்.மாத்தூர் மறுத்தார். அவர் கூறுகையில், நான் COAI அமைப்பில் உள்ள செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாக சாட்சியளிப்பதாகக் கூறுவது தவறு. ஏற்கனவே இந்தத் துறையில் உள்ள செல்போன் நிறுவனங்களுக்கு லைசென்ஸை தந்தபோது அதை நான் எதிர்க்கவில்லை என்பது உண்மை தான். காரணம், அப்போது மிகக் குறைவான விண்ணப்பங்களே வந்தன. இதனால் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு என்ற பிரச்சனையே எழவில்லை. ஆனால், புதிதாக இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்க பல நிறுவனங்களும் போட்டி போட ஆரம்பித்த பின்னர் தான் ஸ்பெக்ட்ரம் தட்டுப்பாடு குறித்து நான் எனது கருத்துக்களை பதிவு செய்தேன் என்றார்.

இதையடுத்துப் பேசிய ராசாவின் வழக்கறிஞர், ராசா மீது சிபிஐ விசாரணை தொடங்கி பல மாதங்கள் வரை மாத்தூர் அமைதி காத்தது ஏன்?. தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட தொலைத் தொடர்பு ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரித்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன், அப்போதும் செயலாளராக இருந்த மாத்தூர் மீதும் குற்றம் சாட்டியுள்ளது என்றார்.

மேலும் சிபிஐ நெருக்கியதாலும், இந்த வழக்கில் சிபிஐ தன்னையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்துவிடும் என்று பயந்து தான் ராசாவுக்கு எதிராக மாத்தூர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளையும் மாத்தூர் மறுத்தார்.

இந்த வழக்கில் 6 நிறுவனங்கள், 19 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் ராசா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரா தவிர அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். பெகுராவுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. ராசா இதுவரை ஜாமீனே கோரவில்லை.

ராசாவிடம் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு முடிவு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் ராசாவிடம் விரைவில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு திட்டமிட்டுள்ளது.

இத் தகவலை 2ஜி குறித்து விசாரணை நடத்தி வரும் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார். மேலும் 2ஜி வழக்கு தொடர்பான விசாரணை முடிவடையாததால் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.



அயோத்தி ராமர் கோவிலை தகர்ப்போம்: நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்

Posted: 18 Apr 2012 04:19 AM PDT


ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராமவிரகாஷ் யாதவுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் உள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த கோவிலுக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் கோவிலையும், மாவட்ட நீதிமன்றத்தையும் வெடிகுண்டு வைத்து தகர்த்தப் போவதாக பைசாபாத் மாவட்ட நீதிபதி ராம்விரகாஷ் யாதவுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.

அந்த கடித்தத்தில் ராமஜென்ம பூமி வளாகத்தையும், மாவட்ட நீதிமன்றத்தையும் குண்டு வைத்து தகர்க்கப்போவதாக யாரோ கையால் எழுதி சாதாரண தபாலில் அனுப்பியுள்ளனர். நீதிபதி யாதவ் அந்த கடித்தத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து ராமர் கோவிலுக்கும், மாவட்ட நீதிமன்றத்திற்கும் பாதுகாப்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து பைசாபாத் டி.ஐ.ஜி. பானுபாஸ்கர் கூறுகையில்,

ராமர் கோவிலைத் தகர்க்கப்போவதாக அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இதுவரை வந்துள்ள எந்த ஒரு கடிதத்தையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வந்துள்ள மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்.

கடந்த மாதம் ராமநவமியின்போது ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் கடிதம் வந்தது. இந்த 2 கடிதகங்களையும் எழுதியது ஒரு நபரா என்று அவற்றை ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் வந்த கடிதத்தில் அப்துல் கரீம் என்ற பெயர் இருந்தது. அது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் இருந்து வந்தது. அந்த கடிதத்தை எழுதிய உண்மையான நபர் இன்னும் சிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.



ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்... எதையும் நானே பேஸ் பண்ணுவேன்! - தனுஷ்

Posted: 18 Apr 2012 03:37 AM PDT


3 பட வெளியீடு மற்றும் வர்த்தகத்தில் ரஜினிக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத நிலையில், அவர் பெயரை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிடுவது எந்த வகையிலும் நியாயமற்றது, ஏற்க முடியாதது, என்றார் நடிகர் தனுஷ்.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ் - ஐஸ்வர்யா நடித்த 3 படத்தை தெலுங்கில் வெளியிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு, அதன் வெளியீட்டாளர் நட்டி குமாருக்கு ரஜினி நஷ்ட ஈடு தருவார் என செய்தி வெளியானது.

இதற்கு உடனடியாக தன் கைப்பட எழுதிய அறிக்கையில் மறுப்பு தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் ஹீரோ தனுஷும் தன் பங்குக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ரஜினி மகளை திருமணம் செய்துவிட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக, இட்டுக்கட்டி வரும் செய்திகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. 3 படத்தால் யாருக்கும் நஷ்டமில்லை. அப்படி நஷ்டமென்று யாரும் சொல்லிவில்லை. அப்படியே நஷ்டம் வந்தாலும் அதை ஈடு செய்யும் வலிமையை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். என் குடும்ப பிரச்சினையை நானே பார்த்துக் கொள்வேன். ரஜினியை இந்தப் படத்தோடு ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும்," என்றார்.

இப்போது 3 படத்தை இந்தியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியை, கமல் சொன்ன அட்வைஸ்படி ஷார்ப்பாக எடிட் பண்ணி வெளியிடுகிறாராம்.

இதுகுறித்துக் கூறுகையில், "கமல் சொன்ன சில யோசனைகளின்படி இரண்டாம் பாதியை எடிட் செய்து வருகிறேன். இந்தியில் நிச்சயம் நான் நினைத்தபடி இந்தப் படம் போகும்," என்றார்.



நகை கடையில் பரபரப்பான 12 நிமிடங்கள்: கொலையாளியின் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன

Posted: 18 Apr 2012 03:31 AM PDT


சென்னை நெற்குன்றத்தில் வசித்து வந்த நகை கடை அதிபர் கணேஷ்ராம் கடந்த 14-ந்தேதி அவரது கடையில் வைத்தே கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணேஷ்ராம் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் இதில் முன்னேற்றம் ஏற்பட்டது போல தெரிந்தது. அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கணேஷ்ராம் கொலையில் எதிர்பார்த்த அளவுக்கு துப்பு துலங்க வில்லை.

காதல் தகராறு காரணமாக கொலை நடந்ததா? 1 கிலோ நகை பிரச்சினையில் கணேஷ்ராம் கொல்லப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கொலையாளி யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது தெரியாமலேயே உள்ளது.

கணேஷ்ராமின் கடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் சிக்கிய வாலிபர்தான் கொலையாளி என்பதை உறுதி செய்துள்ள போலீசார் அந்த வாலிபர் யார்? என்பது பற்றி தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். வாலிபரின் போட்டோ தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டோவை பழைய குற்றவாளிகளின் போட்டோவுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி பற்றி தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்வதற்காக செல்போன் எண்களும் வெளியிடப்பட்டன. ஆனால் வாலிபர் பற்றி யாரும் துப்பு கொடுக்கவில்லை. இதனால் கொலையாளியை கண்டு பிடிப்பதில் பின்னடைவு எற்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொலையாளி பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள். கணேஷ்ராம் கொலை செய்யப்பட்ட அன்றே கொலையாளியின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டனர். ஆனால் அதில் துப்பு துலங்காததால், இன்று கொலையாளியின் வீடியோ படங்களை வெளியிட்டுள்ளனர்.

கணேஷ்ராமை கொலை செய்ய தயாராகும் கொலையாளி கடைக்குள் நுழைவது முதல்... கணேஷ் ராம் கொலையுண்டு கிடந்த லாக்கர் அறைவரை அவனது நடமாட்டம் அதில் பதிவாகி உள்ளது. ஆனால் கணேஷ்ராம் கொலை செய்யப்படும் காட்சி அதில் இடம் பெறவில்லை. லாக்கர் அறையின் வாசல் வரைதான் கேமராவின் பார்வைபட்டுள்ளது.



3 பட வியாபாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ரஜினி அறிக்கை

Posted: 18 Apr 2012 03:17 AM PDT


3 படத்தின் வர்த்தகத்துக்கும் எனக்கும் எந்தவித தொடர்புமில்லை. இதுகுறித்து வெளியானவை பொய்ச் செய்திகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்க, மருமகன் தனுஷ் - ஸ்ருதி நடித்த 3 படத்தின் தெலுங்கு வெளியீட்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால, அதை ஈடுகட்டுவதில் உதவ ரஜினி முன்வந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இது முழுக்க தவறான செய்தி என ரஜினியே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது மகள் ஐஸ்வர்யா இயக்கி, தனுஷ், ஸ்ருதி நடித்து சமீபத்தில் வெளியான `3' திரைப்படத்தில் வியாபார ரீதியாக என்னை சம்பந்தப்படுத்தி ஒரு பொய்யான செய்தி வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கும், எனக்கும் வியாபார ரீதியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆகவே திரைப்பட வினியோகஸ்தர்கள் யாரும், என்னை சம்பந்தப்படுத்தி வெளிவரும் பொய்யான செய்திகளை நம்பவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.





Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™